காவலர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு சிறப்பு வாக்குறுதிகள் அறிவித்த விஜய்
- Surendran Sumdraraj
- 15 Apr, 2026
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காவலர்கள், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்காகப் பல்வேறு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். மேற்கு மாவட்ட மக்களை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்த பிரசாரத்தில், பல துறைகளைச் சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்தி புதிய திட்டங்களை அவர் வெளியிட்டார்.
நெசவாளர்களுக்காக அரசு சார்பில் சர்வதேச சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும் என தெரிவித்த விஜய், கைத்தறி மற்றும் விசைத்தறி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், கைத்தறிக்கு 500 யூனிட் மற்றும் விசைத்தறிக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், நூல் மற்றும் சாயங்களுக்கு 50 சதவீத மானியம் தரப்படும் என்றும் கூறினார். நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், மாத ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
விவசாயிகளுக்காக 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்போரின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



