ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன? எதற்காக இது நடத்தப்படுகிறது?
- Surendran Sumdraraj
- 23 Jun, 2026
திருமஞ்சனம் (Aani Thirumanjanam) என்பது சிவபெருமானின் நடராஜ வடிவத்திற்கு, தமிழ் மாதமான ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடத்தப்படும் மகா அபிஷேகமும், பெருவிழாவும் ஆகும். இது ஆனி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது
ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்கு ஆனி திருமஞ்சனம் என்று பெயர். இது ஆனி உத்திரத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதத்தில் சிதம்பரத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.ஆனி திருமஞ்சனத்தை கண்ணார கண்டு தரிசித்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும், பிறவிப் பிணியில் இருந்து விடுபடலாம், செல்வம் சேரும், வாழ்வில் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனந்தமயமான வாழ்வை பெற ஆனி திருமஞ்சன தரிசனம் காண வேண்டும் என சொல்லுவதுண்டு.
சிவ பெருமானை அபிஷேகப் பிரியர் என அடியார்கள் சொல்லுவதுண்டு. அக்னி சொரூபமாக விளங்கக் கூடிய சிவ பெருமானுக்கு பல விதமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் அவரது மனம் மகிழும் என்பது நம்பிக்கை. சிவன் கோவில்களில் இருக்கும் மூலவரான சிவ ரூப திருமேனிக்கு நாள்தோறும் அபிஷேகம் நடைபெறும். 16 முதல் 32 அபிஷேகங்கள் செய்யப்படுவதுண்டு. ஆனால் சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் 24 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.
நடராஜ அபிஷேகங்கள் :
அதே சமயம் சிவ பெருமானின் ரூபங்களில் ஒன்றான நடராஜ மூர்த்திக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். இந்த அபிஷேகங்களை மகா அபிஷேகம் என்பார்கள். இந்த அபிஷேகங்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் வரை நடத்தப்படும்.
நடராஜ அபிஷேக நாட்கள் :
1. சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
2. ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் 3 அல்லது 4 மணிக்கு அபிஷேகம்.
3. ஆவணி மாத பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலை அபிஷேகம்
4. புரட்டாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
5. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயவித்திற்கு முன் அபிஷேகம்
6. மாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
சிறப்பான 2 அபிஷேகங்கள்
இந்த ஆறு அபிஷேகங்களையும் கண்டு, நடராஜரை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ஆனந்தமயமான வாழ்க்கை ஏற்படும் என்பது ஐதீகம். நடராஜர் மூலமூர்த்தியாக உள்ள சிதம்பரத்தில் இந்த ஆறு அபிஷேகங்களும் மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இருந்தாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா தரிச்னம் என்றும், ஆனி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனி திருமஞ்சனம் என்றும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு அபிஷேகங்களுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன ?
மார்கழி மாதம் என்பது தேவர்களின் காலை பொழுதாகும். இந்த மாதத்தில் தேவர்களே சிவனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபடுவதாக நம்பிக்கை. அதனால் இதை ஆருத்ரா தரிசனம் என்கிறோம். அதே போல் ஆனி மாதம் என்பது தேவர்களின் மாலை நேரம் ஆகும். நாம் எப்படி காலை, மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுகிறோமோ, அதே போல் தேவர்களும் தங்களின் மாலை நேரத்தில் சிவனுக்கு அஷேகம் செய்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் நடராஜருக்கு மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் மாலையிலும், மார்கழி மற்றும் ஆனி மாத அபிஷேகங்கள் மட்டும் காலையிலும் நடத்தப்படுகின்றன.
ஆனி திருமஞ்சன தரிசன சிறப்புகள் :
சிதம்பரத்தில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் நடக்கும் அபிஷேகத்தின் போது ராஜ சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருள, அவருக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெறும். கிட்டதட்ட 3 மணி நேரம் இந்த மகா அபிஷேகம் நடத்தப்படும். தேவர்கள், ஈசனை வழிபடும் காலம் என்பதாலேயே இந்த இரண்டு அபிஷேகங்களும் பிரம்ம முகூர்த்த வேளையில் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த அபிஷேகத்தை தரிசிப்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சிவனின் திருவருள் முழுவதுமாக கிடைக்கும். வேண்டிய வரங்களை சிவ பெருமான் அருள்வார் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆனி திருமஞ்சனம் இந்த ஆண்டு ஜூலை 12 ம் தேதி வருகிறது. அன்று நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளதால் நடராஜரை வழிபடுவது சிறப்பானதாகும்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



