எம்சிஎம்சியின் விசாரணை முடிவடைந்த பிறகு முஹிடினிடம் மன்னிப்புக் கேட்கிறேன்'!
- Muthu Kumar
- 15 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 15-
வெளிநாட்டினருக்கு உதவித்தொகை விநியோகிக்கப்படுவதைப் பெரிக்காத்தான் நேஷனலின் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் முஹிடின் யாசின் தற்காத்துப் பேசியதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியிருந்தார். அக்குற்றச்சாட்டு தவறு என்று மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அறிவிக்குமானால் அவரிடம் மன்னிப்புக் கேட்க தயார் என்று அன்வார் நேற்று சூளுரைத்தார்.
மூன்று தரப்புகளிடமிருந்து தமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் குறித்து எம்ஏசிசி தற்போது விசாரணை நடத்தி வருகிறது, அத்தரப்புகள் கொடுத்த தகவல்கள் தவறானவை என்பது அவ்விசாரணையில் தெரிய வந்தால், தவற்றை ஒப்புக் கொண்டு முஹிடினிடம் மன்னிப்புக் கேட்பேன் என்று மக்களவையில் பிரதமர் குறிப்பிட்டார்.
அன்வாரின் குற்றச்சாட்டு தவறு என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் முஹிடினிடம் அவர் மன்னிப்புக் கேட்பாரா என்று பெரிக்காத்தானின் உலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹிட்டும் அக்கட்சியின் லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுமனும் மக்களவைவில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வெளிநாட்டினரும் நாட்டின் மேம்பாட்டுக்கு பங்களித்து வருவதால், அவர்களை அரசாங்கம் சிரமத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பெர்சத்து தலைவர் முஹிடின் குறைகூறிவருவதாக அன்வாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. மின்சாரத்திற்கும் ரோன் 95 பெட்ரோலுக்கும் அளிக்கப்பட்டுவரும் மானியம் மலேசியர்களுக்கு மட்டுமே உதவுவதாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் அரசாங்கம் அம்முடிவு செய்தது என்று அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாட்டினருக்கு உதவித்தொகைச் சலுகை கொடுக்காததன் மூலம் அவர்களை அரசாங்கம் சிரமப்படுத்துவதாக குறிப்பிட்டதாகக் கூறப்படுவதை முஹிடின் மறுத்தார்.அக்குற்றத்தை சுமத்திய அன்வார் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



