ராமதாஸ் உடன் நிச்சயம் இணைய மாட்டேன்- பாமக தொண்டர்கள் முன்னிலையில் அன்புமணி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதற்கிடையே இப்போது ராமதாஸை சுற்றிலும் துரோகிகளும் திமுகவின் கைக்கூலிகளும் இருப்பதாகக் கூறியுள்ள அன்புமணி, அவர்கள் இருக்கும் வரை நிச்சயம் ராமதாஸுடன் இணையப் போவதில்லை என்று கூறினார்.

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்தது. அந்த மோதல் இப்போது பொதுவெளிக்கும் வந்துவிட்டது. இரு தரப்பினருமே இப்போது தனித்தனியாகவே செயல்பட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரை விமர்சித்து வருகிறார்கள்.

ராமதாஸ் தரப்பினர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக ராமதாஸே பல முறை அன்புமணியை நேரடியாக விமர்சித்துள்ளார். அன்புமணி தரப்பினரும் ராமதாஸ் ஆதரவாளர்களை விமர்சித்தாலும் கூட இதுவரை ராமதாஸ் குறித்து எந்தவொரு கருத்தும் சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.

அக்கட்சியில் இருக்கும் பல தொண்டர்கள் மீண்டும் ராமதாஸும், அன்புமணியும் இணைய வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் ராமதாஸுடன் இணையப் போவதில்லை என்று அன்புமணி கூறியுள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இன்று பாமக சார்பில் உரிமை மீட்பு பயணப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தான் அன்புமணி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

ராமதாஸிடம் இருந்து தன்னை துரோகிகள் தான் பிரித்தாக தெரிவித்த அன்புமணி, ராமதாசை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் உள்ளனர் என்றும் அந்தத் துரோகிகள் இருக்கும் வரை அங்குச் செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இங்கு அனைவருக்கும் நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். ராமதாஸிடம் இருந்து என்னைப் பிரித்து, இன்று அவரை சுற்றி துரோகிகள் இருக்கிறார்கள். அந்தத் துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கும் வரை நான் அங்குச் சேர மாட்டேன்.நான் அங்கு இணையவும் மாட்டேன்.

ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி. கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் சமூகத்திற்காகவும் உழைத்துக் கொண்டு இருப்பவர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஆனால், அவரை இன்று திசைதிருப்பி, மனதை மாற்றி அங்குச் சில துரோகிகள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரை நான் நிச்சயம் அங்குச் சேர மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நான் வலியோடும், மன உளைச்சலுடனும் தான் உங்களிடம் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று பிற்பகல் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ. அருள் காரில் சென்று கொண்டு இருந்தபோது அவரை அன்புமணி ஆதரவாளர்கள், வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டியுள்ளனர். தன்னை கொல்ல முயன்றதாகவும் இந்த விவகாரத்தில் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அருள் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். மறுபுறம் இந்த விவகாரத்தில் அருள் மீதே தவறு என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ஆதரவாளர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *