ஸம்ரி வினோத் சட்டத்திற்கும் மேலானவரா? உள்துறை அமைச்சும் காவல்படையும் பதில் சொல்லுமா? ராயர் கேள்வி
- Surendran Sumdraraj
- 08 Mar, 2026
பினாங்கு, மார்ச் 8-
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸம்ரி வினோத் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தைக் காட்டிலும் மேலானவரா என்பதை உள்துறை அமைச்சும் அரச மலேசிய காவல்படை படையும் தெளிவுபடுத்த வேண்டுமென ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்வி எழுப்பினார். முன்னதாக புக்கிட் மெர்தாஜாமில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிவிட்டு வேகமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஜாகுவார் சொகுசு கார் சம்பவம் குறித்து பத்திரிகை செய்தி வெளியிட்டது அவர் அவ்வாறு கேட்டார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், மார்ச் 7 இரவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய ஒரு காணொளியை தாம் பெற்றதாகத் தெரிவித்தார். அந்தக் காணொளியில், ஜாகுவார் வகை சொகுசு கார் ஒன்று ஆபத்தான முறையில் ஓட்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்ரீ மருதுவர் ஜடாமுனீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு வழிபாட்டு நிகழ்வின் அருகில் மார்ச் 7 அன்று நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
VML 9332 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஜாகுவார் காரை சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸம்ரி வினோத் ஓட்டினாரா என்ற கேள்வியையும் ராயர் எழுப்பினார்.
மேலும், ஸம்ரி வினோத் தான் அந்த காரை ஓட்டினார் என்றால், மார்ச் 3 அன்று தாம் அளித்த போலீஸ் புகாரின் பின்னரும் அவர் புக்கிட் மெர்தாஜாமுக்கு ஏன் வந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதேவேளையில் தாம் அளித்த புகாருக்குப் பின்னரும் இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதை எப்படி எடுத்துக் கொள்வது என அவர் மேலும் வினவினார்.
இந்த சம்பவத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தள்ளியதாக குற்றம் சாட்டப்படும் ஸம்ரி வினோத மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேட்டார்.
இறுதியாக, ஸம்ரி வினோத் என்ற தனி நபர் சட்டத்திற்கும் மேலானவரா என்று உள்துறை அமைச்சரும் காவல்படையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ராயர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



