நெகிரி செம்பிலான் டிஏபி தலைவராக ஜே. அருள் குமார் நியமனம்
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
சிரம்பான், ஆக. 10-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) தலைவராக நீலாய் சட்டமன்ற உறுப்பினரும், தேசிய டிஏபி உதவித் தலைவருமான ஜே. அருள் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த நியமனம், நெகிரி செம்பிலான் டிஏபி மாநிலக் குழுவின் உறுப்பினர்களால் ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாக டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சுமார் 22 ஆண்டுகளாக மாநிலத் தலைவர் பதவியை வகித்து வந்த அவர், அந்தப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அருள் குமார் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“அருள் குமாரைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் சாதகமான ஒன்றாகும். டிஏபி பல இனங்களை உள்ளடக்கிய கட்சி என்பதையும் இது நிரூபிக்கிறது. ஒருவரின் இனம் அல்லது பின்னணியை விட, அவரது தகுதி மற்றும் தலைமைத்துவ திறனை அடிப்படையாகக் கொண்டே நாங்கள் பார்க்கிறோம்,” என்று அந்தோணி லோக் கூறினார்.
சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் டிஏபி மாநிலக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய மாநிலக் குழு அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கூறிய லோக், அவர்கள் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வருவதுடன் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



