தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? – வேல்முருகன் கேள்வி
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
சென்னை: கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிலேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்குக் கட்டுமான மூலப்பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தேவையை முழுமையாக உறுதி செய்யாமல், பிற மாநிலங்களின் கட்டுமானப் பணிகளுக்காக இயற்கை வளங்களை அனுப்புவது தொலைநோக்கு நிர்வாகமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு அவசியம் என்றாலும், அதன் பெயரில் தமிழ்நாட்டின் மலைகள் மற்றும் பாறை வளங்களை இழக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
கேரளாவுக்கு கனிமப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிறப்பு விலக்கு அளிப்பது தொடர்பான பரிசீலனையைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



