கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறு
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
கிருஷ்ணர் ஜெயந்தி தமிழ் மாதம் ஆவணி அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. இது மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளாகும்.கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ,''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.
கிருஷ்ணர் அவதார வரலாறு:
மதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.
வீட்டிற்கு வருகை:
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.பிருந்தாவனத்தில் ஒவ்வோவொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கிருஷ்ணர் திருவடி எதற்கு?
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.
நாமும் கிருஷ்ணரை வழிபட்டு அனைத்து சகலநலன்களும் பெறுவோம்!!
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



