ஐ.நா. சபைக்கு 5 மயில்களைப் பரிசாக வழங்கியது இந்தியா
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
ஜெனீவா, ஆக. 11-
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக வளாகத்திற்கு அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. தலைமையக வளாகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அரியானா பூங்கா’ அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் இயற்கைச் சூழலையும் அழகையும் மேம்படுத்தும் வகையில், அங்கு மயில்களை வளர்க்கும் பாரம்பரியம் பல ஆண்டுகளாக இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஐ.நா. சபைக்கும் இடையிலான நட்புறவின் அடையாளமாகவும், இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த மயில்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 1981ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு மயில்களை ஐ.நா. வளாகத்திற்கு வழங்கியிருந்தார்.
அதன் பின்னர் சுமார் 45 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்தியா மீண்டும் 5 மயில்களை வழங்கியுள்ளது. அவற்றில் அரிய வகையைச் சேர்ந்த வெள்ளை நிற ஆண் மயிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த மயில்கள் ஐ.நா. அலுவலக வளாகத்தில் உள்ள அரியானா பூங்காவின் சுற்றுச்சூழல் அழகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



