புகைமூட்டம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோருக்கு அனுமதி – கல்வி அமைச்சர் தகவல்
- Surendran Sumdraraj
- 07 Sep, 2026
கோலாலம்பூர், செப். 7 –
நாட்டில் தற்போது நிலவி வரும் புகைமூட்ட நிலைமையைத் தொடர்ந்து, குழந்தைகளின் உடல்நலம் குறித்து பெற்றோர் இன்னும் கவலைப்படுவதாக இருந்தால், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கலாம் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ பத்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முடிவை எடுக்கும் பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு அதுகுறித்து தகவல் தெரிவிப்பது போதுமானது என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக இன்று தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்த பத்லினா, புகைமூட்ட நிலை காரணமாக பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தாம் புரிந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
“தற்போதைய புகைமூட்ட நிலையைப் பார்த்து பெற்றோர் கவலைப்படுவது இயல்பானது. அவர்களின் கவலைகளை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். குழந்தைகளின் உடல்நலமும் பாதுகாப்பும் எங்களது ஒவ்வொரு நடவடிக்கையிலும் முதன்மையானதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மேலும், சுற்றுச்சூழல் துறை வெளியிடும் காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகளைக் கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக புகைமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்றும், தேவையானபோது பள்ளிகளுக்குக் கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் பத்லினா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



