யானைகளைப் பாதுகாப்போம்; காடுகளைப் பாதுகாப்போம் – அமைச்சர் ரஞ்சித்குமார்
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
சென்னை, ஆக. 12-
யானைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு உயிரினத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; அவற்றின் வாழ்விடங்களான காடுகள், நீராதாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த பல்லுயிரினங்களையும் பாதுகாப்பதாகும் என தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், யானைகள் காடுகளின் வளத்தையும் இயற்கைச் சூழலின் சமநிலையையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விதைகளைப் பரப்புதல், தாவர வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட சூழலியல் பணிகளை மேற்கொள்வதால் யானைகள் “சூழலியல் பொறியாளர்கள்” என அழைக்கப்படுகின்றன என்றார்.
2025ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 9.1 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ஐந்து யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மனித–யானை மோதலைக் குறைப்பதற்காக தமிழக அரசு இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் யானைத்தடுப்பு அகழிகள் மற்றும் மின்வேலிகளை மேம்படுத்துதல், சிறப்பு ரோந்துப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் பணிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



