நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை
- Surendran Sumdraraj
- 22 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 22-
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ராகுல் காந்தி மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இந்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், பிற எதிர்க்கட்சி எம்.பி.க்களைப் போல கருப்பு உடை அணியாமல், வழக்கமான உடையிலேயே நாடாளுமன்றத்திற்கு அவர்கள் வந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இதனால், திமுகவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறை குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. திமுக போராட்டத்தில் பங்கேற்காததற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், அதன் முடிவு அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



