பகுதி 5 (ஆரண்ய காண்டம்)
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
கரன்வதை கதை
செக்கர் வானம் மேல்தழுவிய கரிய மேகம்போல் அவள் காட்சி அளித்தாள், வெம்மையான தீயில் புழுங்கும் பாம்பு எனப் புரண்டாள்; கரன் இராவணன் உடன் பிறந்த தம்பி, அவன் அந்த எல்லைக்குக் காவலனாக இருந்தான்; அவனிடத்தில் சென்று தன்துயரத்தை வெளியிட்டாள்; மூக்கு அறுத்தவரை வேர் அறுக்கும்படி வேண்டினாள்.
கரன் போருக்குப் புறப்பட்டான்; அவன் படை வீரர் பதினான்குபேர் அவனைத் தடுத்து நிறுத்தித் தாமே களம் நோக்கிச் சென்றனர்; அவர்கள் முதற்பலி ஆயினர்.
கரனின் அரக்கர்சேனை கடலெனத் திரண்டு இலக்குவனை எதிர்க்க வந்தது; இலக்குவன் போர் செய்யத் துடித்தான்; தன்னை அனுப்புமாறு வேண்டினான்.
“தவம் செய்யும் முனிவர் அரக்கர்களை அழிக்கும் பணியைத் தன்னிடம் ஒப்புவித்துள்ளனர். அதனைத் தானே செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி வில்லேந்திய வண்ணம் இராமன் பகைவர்களைச் சந்தித்தான்; சிங்கத்தைச் சூழ்ந்த யானைக் கூட்டம் போலக் கரன்படைகள் இராமனைச் சூழ்ந்தன. அவர்களுக்குத் திரிசிரா (முத்தலையன்) என்பவன் தலைமை தாங்கினான். அவனுடைய மூன்று தலைகளும் மூலைக்கு ஒன்றாகச் சென்று உருண்டன. படைவீரர் அச்சம்கொண்டு சிதறி ஒடினர். துடணன் என்பவன் அடுத்துத் தலைமை தாங்கினான். அவன் கரன் தம்பி; அவனும் போர்க்களத்தில் மடிந்தான்.
பிறகு கரனே களம்நோக்கித் தேரைச் செலுத்தினான்.
இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்க இருக்கும் போருக்கு முன்னிகழ்வாகக் கரனோடு நடந்த போர் அமைந்தது. இராமன் ஒன்பது அம்புகளை ஒருசேரக் கரன் மீது ஏவினான். அவற்றிற்கு எதிராக அம்புகளைச் செலுத்திக் கரன் அவற்றை அறுத்து அழித்தான்; அம்பு மழையினால் இராமனது உருவம் முழுவதையும் மறைத்து விட்டான். அதைக் கண்டு தேவர் நடுங்கினர். இராமன் வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தான்; அது முறிந்து விட்டது.
வில்லிழந்து இராமன், நிராயுத பாணியாக ஆகி விட்டான். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது. பரசுராமனிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தான்; அதற்காகக் கைநீட்டினான்; வருணன் கொண்டுவந்து சேர்த்தான்; அந்த வில் அவனுக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.
சூர்ப்பனகை செயலிழந்து வயிற்றிலும் வாயி லும் அடித்துக்கொண்டாள்; மூக்கோடு தான் முடிந் திருக்கலாம்; வாக்கினால் கரன் உயிர் குடித்தமைக்கு வருந்தினாள்; எனினும், அந்தத் துன்பம் நீடித்திருக்கவில்லை; இராமனை அடைய வேண்டுமென்ற ஆசை அவளை வெறி கொள்ளச் செய்தது; “இராவணனிடம் சென்று இராமனைப் பிடித்துத்தரும்படி கேட்கலாம்” என்று நினைத்த வண்ணம் இலங்கை நோக்கி விரைந்தாள்.
இராவணன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான், ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வ மகளிர் நடனமாடினர். அவன் செல்வக் களிப்பிலும் காமக் களிப்பினும் தன்னை மறந்து தருக்கோடு வீற்றிருந்தான். தன்னை வெல்வாரும் கொல்வாரும் இன்றித் தரணியை ஆண்ட காவலன் அவன்.
இலங்கை நகரின் வடக்கு வாயிலில் மூக்கிலும் செவியிலும் குருதி கொட்டச் சூர்ப்பனகை முறையிட்டுக் கொண்டே வந்தாள். அந்நகர் அரக்க மகளிர் இதைக் கண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு இரங்கி அழுதனர். இராவணன் தங்கை மூக்கு அற்றுத் துணையின்றிப் போக்கற்று வந்திருப்பதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இலங்கை அரசன் கால்களில் விழுந்து புரண்டாள்; வேந்தன் இதைக் கண்டு. அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டான், இடியொலிபோல் பேரார வாரம் செய்து, “யாவர் செயல்?” என்று கேட்டான்.
“கானிடை அடைந்து காவல் புரிகின்ற வீரர் இருவர், மன்மதனைப் போன்ற அழகு உடையவர்; அவர்கள் மானிடர்தான் எனினும் மாஇடர் செய் துள்ளனர்; வாள் உருவித் தடிந்தனர்” என்றாள்.
“மானிடருக்கு இத் துணிவு வாராது; நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்; அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியவில்லை இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள்; நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான்.
“உருவிலே மன்மதனை ஒப்பர்; தோள் வலிமை யில் மேருமலையை நிகர்ப்பர்; முனிவர் வாழ்வில் அவர்கள் அக்கறை கொண்டவர்; வில்லாற்றலும் வீரமும் உடைய அவர்கள் உன்னைத் துரசாக மதிக்கின்றனர்; அரக்கரை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ளனர்; அவர்கள் தசரதன் புதல்வர்; இராமன் இலக்குவன் என்பன அவர்கள் பெயர்கள்” என்றாள்.
“அங்கிருந்த நம் இனத்தவர் அவர்களை எப்படி விட்டு வைத்தனர்?” என்று கேட்டான்.
“கரனும் தூஷணனும் என் குறையைக் கேட்டனர். பின் அவர்களை எதிர்த்து மாண்டுவிட்டனர்” என்றாள்;
“நீ செய்த தவறு என்ன? மூக்கும் செவியும் அறுக்க நீ செய்த பிழை யாது?” என்று கேட்டான்.
“பெண்ணால் வந்த பெரும்பிழை” என்றாள்.
“யார் அவள்?”
“கொடி போன்ற மென்மை உடைய அப் பேரழகியின் பாதம் தீண்ட இந்தப் பார் பாக்கியம் செய்தது; அவள் பேர் சீதை” என்று கூறி அவள் வடிவினை எல்லாம் பாராட்டத் தொடங்கினாள்.
“அவள் சொற்கள் காமரம் என்னும் பண்ணிலே இசைக்கும் பாடலாகும்; திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள்; அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது; பாதங்கள் செம்பஞ்சு போன்றவை; விரல்கள் பவளத்தைப் போன்றவை; வதனம் தாமரை மலரைப் போன்றது; கண்கள் கடலைப் போன்றன; “ஈசனார் கண்ணால் அநங்கன் எரிந்து அழிந்தான்” என்பது பொய்யுரை, வாசம் நாறும் கூந்தலாளைக் கண்டு அவளை அடைய முடியாமல் அவன் வெந்து தேய்ந்தான் என்பதுதான் உண்மை”.
“வேலினையும் வாளினையும் வெற்றி கொண்ட கண்ணை உடைய அழகியை ஒவியத்திலும் எழுத முடியாது; இவளைப் போன்ற பேரழகியைத் தேவர் உலகத்திலும் காண முடியாது; நாகர் உலகத்திலும் காண முடியாது; இந்த மண்ணுலகத்திலும் பார்க்க முடியாது. இம்மூவுலகத்திலும் காண முடியாத பேரழகி அவள்”.அவள் தோள் அழகை எடுத்துச் சொல்லு வேனோ? அவள் முகத்தில் உலவுகின்ற கண் அழகைச் சொல்லுவேனோ! மற்றைய அங்கங்களில் அழகை வருணிப்பேனோ! அவள் அழகைத் தனித்தனியே சொல்லும் ஆற்றல் எனக்கு இல்லை; நாளையே நீ பார்க்கப் போகிறாய்; அதனால் யான் எடுத்துச் சொல்லத் தேவை இல்லை”.
“வில்லைப் போன்றது நெற்றி என்றாலும், வேல் போன்றது விழிஎன்றாலும், முத்துப் போன்றது பல் என்றாலும் சொல்ல அழகாக இருக்குமேயன்றி உண்மையை உரைத்தது ஆகாது. புல்லைப் போன்றது நெல் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதனைப் போன்றதுதான் இவ் உவமைகள்.”
“இந்திரன், இந்திராணியைப் பெற்றான். ஈசன் உமையைப் பெற்றான். தாமரைச் செங்கணான் செந்திருவைப் பெற்றான்; சீதையை நீ பெறறால் நீ தான் அவர்களைவிட மேன்மை பெற்றவன் ஆவா
“பார்வதியை இடப் பாகத்தில் ஒருவன வைத்தான்; தாமரையில் வாழும் திருமகளை மார்பகத்தில் ஒருவன் வைத்தான்; பிரமன் நாவில் வைத்தான்; மின்னல் போன்ற இடையாளாகிய சீதையை வீரனே! நீ பெற்றால் எப்படி வைத்து வாழப் போகிறாய்?"
“மழலை மொழி மகிழப் பேசும் அழகியைப் பெற்ற பின் கொள்னை மாநிதிகளை அவளுக்கே கொடுப்பாய்; சீதையை நீ பெறுமாறு செய்வதால் நான் உனக்கு நல்லவள் ஆகின்றேன்; ஆனால், கிள்ளைபோல் மொழி பேசும் உன் விருப்ப மாதர்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அல்லவா?”
“அவள் தெய்வ மகளும் அல்லள்; தாய் வயிற்றில் பிறந்த மானுட மகளும் அல்லள், மண்மகள் தந்த மாமகள் ஆவாள்; சிற்றிடையாளாகிய சீதை என்னும் மானை நீ பெற்றுக் கொண்டு இராமன் என்னும் யானையை வளைத்துப் பிடித்து எனக்கு விளையாடத் தந்துவிடு.”
“அன்னவள் தன்னை உன்னிடம் சேர்க்கவே அவளை அணுகினேன்; அவ் இராமன் தம்பி என்னை இடையிலே புகுந்து மூக்கு அரிந்துவிட்டான் அப்பொழுதே என் வாழ்வினை முடித்துக் கொண்டு இருப்பேன்; உன்னிடம்; சொல்லிவிட்டு உயிரைவிடத் துணிந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.
அவள் பற்றவைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன் அவள் நினைவாக மாறிவிட்டான், இராமனால் உயிரிழந்த தன் தம்பி கரனையும் மறந்தான்; தன் தங்கையின் மூக்கைத் தடிந்த இலக்குவன் மீது கொண்ட பகையையும் மறந்தான்; அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான்; தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான்; சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.
சீதையின் நினைவு ஒருபக்கம்; மானம் ஒரு பக்கம் இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலுடைச் சாயலாளை வஞ்சித்து எயிலுடைய இலங்கையில் சிறை வைப்பதற்குமுன் தன் இதய மாகிய சிறையில் வைத்தான்; வெயிலிடை வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் மென்மை உற்றது; காமநோயால் பீடிக்கப்பட்டு விரக வேதனையால் வெந்து அழிந்தான்; சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்; அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான், தனியனாக விமானம் ஏறி ஐம்புலன்களை அடக்கித் தவ நிலையில் இருந்த மாரீசன் இருந்த இடத்தை அடைந்தான்.
# லட்சுமி சுப்பிரமணியம்
# லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



