தெமர்லோ விபத்து: லாரி ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக் காவல்
- Surendran Sumdraraj
- 15 Aug, 2026
தெமர்லோ, ஆக. 15 —
தெமர்லோ-திரியாங் சாலையில் இருவர் உயிரிழந்த சாலை விபத்தில் தொடர்புடைய டேங்கர் லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்போங் லெபாக் அருகே ஜாலான் தெமர்லோ-திரியாங் சாலையின் 9ஆவது கிலோமீட்டரில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் நசிம் பஹ்ரோன் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் அவர் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் முகமட் நசிம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



