நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 17 மலேசியர்கள் – ஹெலிகாப்டர் தேடுதலிலும் தடயம் இல்லை
- Surendran Sumdraraj
- 07 Sep, 2026
கோலாலம்பூர், செப். 7 –
நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் காணாமல் போன 17 மலேசியர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலும் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
பிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ரோஷன் பாண்டே இதுகுறித்து கூறுகையில், காணாமல் போன மலேசியர்கள் பயணித்ததாக நம்பப்படும் ஆறு வாகனங்கள் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
அந்த வாகனங்கள் கடும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் நான்கு சுற்றுகள் பறந்து தேடியதுடன், சில இடங்களில் மிகவும் குறைந்த உயரத்திலும் பறந்து கண்காணித்ததாக ரோஷன் தெரிவித்தார்.
எனினும், காணாமல் போனவர்களின் தடயமோ, அவர்கள் பயன்படுத்திய வாகனங்களோ அல்லது அவர்களுக்கு சொந்தமான பொருட்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், சம்பவம் நடந்ததாக நம்பப்படும் பகுதிக்கு அருகே இருந்த பல வீடுகளும் தற்போது காணப்படவில்லை. மிகவும் வேகமாக பாய்ந்த வெள்ளநீரில் அந்த வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
காணாமல் போன 17 மலேசியர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



