இராமாயண தொடர்ச்சி பகுதி 6 ஆரண்ய காண்டம்
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
மாரீசன் வதை
இரையானார்கள். நான் தப்பித்து வந்து விட்டேன்” என்றான்.
“வஞ்சனையால்தான் அவனை வெல்ல வேண்டும்; மாயமான் வடிவத்தில் சென்று, அப்பெண் மானை மயக்கு; பெண்ணாகிய அவளுக்குப் பொன்னிறம் மிகவும் பிடிக்கும்; நீ பொன்மானாய் உருவெடு; அவள்முன் பாய்ந்து ஒடு; அவள் இம்மானைப் பிடித்துத் தருக என்பாள்; அதை இராமனால் மீற முடியாது; அவனுக்கு ஒட்டம் காட்டு; அவன் உன்மீது அம்புவிட்டால், ‘இலக்குமணா’ ‘சீதா’ என்று அவன் குரலில் ஒலமிடு; இலக்குவன் காவல் நீங்கும்; என் ஆவல் ஒங்கும்” என்றான்.
மாரீசன் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டான்; மறுத்தால் இராவணன் கொன்று விடுவான்; இராமனை எதிர்த்தால் அவன் அம்புக்கு இரையாக வேண்டுவது தான்; மரணம் என்பது அவனைக் கூவி அழைப்பதை உணர்ந்தான். நச்சுப் பொய்கையில் அகப்பட்ட மீன் தப்ப முடியாது; அந்தக் குளத்தில் இருந்தாலும் சாவு, கரையில் குதித்தாலும் சாவு; இருதலைக் கொள்ளி எறும்பு ஆனான்.
“வீரமரணம் அடைய முடியாமல் போயிற்றே” என்று வருந்தினான். ‘இராமன் அம்புக்கு இரையாவது தனக்கு உயர்வு தரும்’ என்று அமைதி கொண்டான்; வேறு வழி இல்லை; பொன்மான் உருக் கொண்டான்; அந்த நன் மானாகிய சீதைமுன் சென்றான்.
மானைக் கண்ட சீதை அதனைப் பிடித்து விளையாட விரும்பினாள்; பொன்னாலான மேனியும்; மரகத்தால் ஆகிய கால்களும் செவிகளும் புதுமையாய் இருந்தன. இலக்குவன் அதன் பொய்மையைக் கூறி விலக்கினான்; சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள்.
இராமன் மனைவியின் வேண்டுகோளை மதித்தான்; “இப்படியும் ஜீவன்கள் இருக்கலாம்; இவை அபூர்வப் பிறவிகள்” என்று விவாதித்தான்; “மானைக் காட்டுக” என்று சீதையிடம் இராமன் கூறினான்; இலக்குவனும் பின் சென்றான்; ஆசைபெற அந்த மான் விழித்தது.
இராமன் அதன் அழகைக் கண்டு வியந்தான்; “அதனால் நமக்கு என்ன ஆக வேண்டியுள்ளது” என்று இலக்குவன் கூறி மறுத்தான்; “இந்த மாய மானின் பின்னே அரக்கர் ஒளிந்து இருப்பர்” என்றும் சொல்லிப் பார்த்தான்.
இயற்கை மானாக இருந்தால் இதனைப் பிடிப்பதும், மாயமானாக இருந்தால் இதனை மடிப்பதும் என் செயல் என்று இராமன் கூறினான். இராமன் தானே சென்று பிடித்துத் தருவதாயும் பர்ணசாலையில் சீதைக்குக் காவலாய் இலக்குவனை இருக்குமாறு கூறி வில்லும் அம்பும் ஏந்தி, அதன்பின் சென்றான்; அது ஒட்டம்காட்டியது; கிட்டுவது போலக் காட்டி, எட்டி எட்டிச் சென்றது.
அது மாயமான் என்பதை இராமன் உணரத் தொடங்கினான்; இலக்குவன் முன்கூட்டி உரைத்தது குறித்து வியந்தான்; அவனைப் பாராட்டினான்.
மாரீசனும் இராமனை நெடுந்துரம் விலக்கி விட்ட தால், தன் கடமை முடிந்துவிட்டது என்று உணர்ந்தான்; ‘இனி அவன் அம்புக்குத் தப்பமுடியாது’ என்பதால் தப்பித்துக் கொள்ள நினைத்தான்; அதனால் வானை நோக்கிப் பாய்ந்தான்; அவனுக்கு முடிவு கட்டத் தன்கூரிய அம்பினை இராமன் செலுத்தினான்.
மாயமான் மாய்ந்தது; மாரீசன் அதினின்று வெளிப்பட்டு விழுந்தான்; இராவணன் சொல்லிக் கொடுத்தபடி இராமன் குரலில் “ஆ! சீதா இலக்குமணா” என்று அபயக் குரல் கொடுத்து அழைத்துப் பின் உயிர் விட்டான்.
இராமனுக்கு அவன் சூழ்ச்சி விளங்கியது; “கூப்பிட்ட குரலில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்” என்பதை உணர்ந்தான்; விரைவில் பர்ணசாலை நோக்கி விரைந்தான்; இலக்குவன் விழிப்போடு காவல் புரிவான் என்ற நம்பிக்கையோடு இருந்தான்; எனினும் சூழ்ச்சி உருவெடுப்பதற்குமுன் திரும்புவதில் வேகம் காட்டினான்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



