சந்தை விலையை விட குறைந்த விலையில் அரசு நிலம் விற்பனை? இரண்டு ‘டத்தோ’க்களின் தடுப்புக் காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
ஜார்ஜ்டவுன், ஆக. 24-
பினாங்கில் அரசாங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோக வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ‘டத்தோ’ பட்டம் பெற்ற இருவரின் தடுப்புக் காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நூர்ஹனிசா எஸ். எச். சாஹுல் ஹமிட், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் முன்வைத்த தடுப்புக் காவல் நீட்டிப்பு விண்ணப்பத்தை அனுமதித்தார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் 50 வயதுகளில் உள்ள அரசாங்க நிறுவனத்தின் தலைவர் என்றும், மற்றொருவர் 40 வயதுகளில் உள்ள சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, எஸ்பிஆர்எம் சட்டம் 2009-ன் பிரிவு 23-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதிகார பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் டாக்டர் ஷாம்ஷேர் சிங் திண்ட் கூறுகையில், விசாரணையை முழுமையாகத் தொடரவும், பிற சாட்சிகளிடம் தலையீடு ஏற்படாமல் தடுக்கவும் எஸ்பிஆர்எம் கூடுதல் தடுப்புக் காவல் காலத்தைக் கோரியதாகத் தெரிவித்தார்.
குறித்த நிலம் அப்போது நிலவிய சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அரசாங்க நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



