கார் விபத்து வழக்கு: ரஹீம் ஸ்டெர்லிங்கிற்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
லண்டன்: கடந்த மே மாதம் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கிற்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எந்தக் கிளப்பிலும் ஒப்பந்தமின்றி சுதந்திர வீரராக இருக்கும் ஸ்டெர்லிங், கடந்த மே மாதம் ஹாம்ப்ஷையர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஓட்டிச் சென்ற லம்போர்கினி கார், M3 நெடுஞ்சாலையில் மின்லி சந்திப்புக்கு அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை. மேலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் காலை சுமார் 9 மணியளவில் நிகழ்ந்ததாகவும், விபத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட அவர், நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக அவர்மீது மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அபராதம், ஓட்டுநர் உரிமம் தொடர்பான தண்டனை மற்றும் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



