விமான நிலையமும் வேண்டும்.. விவசாய நிலமும் வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
சென்னை: பரந்தூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க கம்பன் கால்வாய் இருப்பதாகவும், அந்தப் பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
பரந்தூரில் உள்ள கம்பன் கால்வாய் மூலம் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைவதாகவும், அதன் காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் அங்கு வந்து இனப்பெருக்கம் செய்வதாகவும் அவர் கூறினார். எனவே, அந்தப் பகுதி தொல்லியல் முக்கியத்துவம் மட்டுமின்றி முக்கியமான சுற்றுச்சூழல் சங்கிலியாகவும் விளங்குகிறது என்றார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக போராடியதாகக் குறிப்பிட்ட ராஜ்மோகன், ஒரு கட்டத்தில் ஆதார் அட்டை காட்டினால்தான் அந்தப் பகுதிக்குள் செல்ல முடியும் என்ற நிலையும் இருந்ததாகத் தெரிவித்தார்.
“விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பதற்கு சமம். நமக்கு விமான நிலையமும் வேண்டும்; விவசாய நிலமும் வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



