தேர்தலில் வெற்றிப் பெற்றால் சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியைக் கட்டி முடிப்பேன்! - டாக்டர் ஜுஹாரி உறுதி

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

சுங்கை பாக்காப், ஜூலை 6: சுங்கை பக்காப் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இடைமுடக்கம் கண்டிருக்கும் சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியை நிச்சயம் கட்டி முடிப்பேன் என பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜுஹாரி அரிஃபின் உறுதியளித்தார்.

 தென் செபராங் பிறை,சுங்கை பக்காப்பில் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு நிலம் வழங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதையும், கட்டடத்தை நிர்மாணிப்பதற்குப் பல தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதையும் தற்போது தாம் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் ஒரு சிறந்த தமிழ்ப்பள்ளியாக விளங்கி வரும் இப்பள்ளிக்கு, சிறந்த தோற்றத்தையும்,  மாணவர்களின் கல்வித் தரத்தையும் உறுதிப்படுத்தவும்,அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி அமைவதை உறுதி செய்வேன் என்றார்.

இங்கு சுங்கை பக்காப் தொகுதி இந்திய வாக்காளர்களுடன் பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்த உறுதியை அவர் வழங்கினார்.

மேலும் இப்பள்ளியை விரைவில் கட்டி முடிப்பதற்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை நடைபெறும் சுங்கை பக்காப் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மிகுந்த சிரத்தை எடுத்து சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியை கட்டிமுடிப்பதற்கான எனது கடமையை நிறைவேற்றுவேன் என டாக்டர் ஜுஹாரி அரிஃபின் குறிப்பிட்டார். 

கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்களில்,தொகுதியிலுள்ள 17 விழுக்காடு இந்திய வாக்காளர்களை கவருவதற்கு, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசுசாரா அமைப்புகள், இயக்கங்கள், பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளின் ஆதரவாளர்களும் படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *