பாஸுடன் மீண்டும் ஒத்துழைப்பா? ஹாடி இருக்கும் வரை அது நடக்காது! - ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோல கங்சார்‌, ஜூலை 9: அம்னோவுக்கும்‌ பாஸ்‌ கடசிக்கும்‌ இடையில்‌ ஒருவேளை ஒத்துழைப்பு  ஏற்படக்‌ கூடிய வாய்ப்புண்டு என்று யாராவது நினைத்தால்‌, அக்கட்சித்‌ தலைவராக டான்ஸ்ரீ அப்துல்‌ ஹாடி அவாங்‌. இருக்கும்‌ வரையில்‌ அதற்கான சாத்தியம்‌ துளியளவுகூட இல்லை.

அப்படி நடக்கலாம்‌ என்று யாரும்‌ கனவுகூட காணக்‌ கூடாது, எதிர்பார்க்கவும்‌ கூடாது என்று, அம்னோ தலைவர்‌ டத்தோ ஸ்ரீ அஹ்மாட்‌ ஸாஹிட்‌ ஹமிடி மிகத்‌ தீர்க்கமாகக்‌ கூறியிருக்கின்றார்‌. 

பாஸ்‌ கட்சியுடனான கடந்த கால அனுபவங்களை மையமாக வைத்து அம்னோ இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.  முன்பு ஒத்துழைப்பு கொண்டிருந்தபோது, கூட்டாகச்‌ சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக, தற்போது பெரிக்காத்தான்‌ நேஷனலில்‌ ஓர்‌ உறுப்புக்‌ கட்சியாக இருக்கும்‌ பாஸ்‌ கட்சி அம்னோவுக்கு செய்த நம்பிக்கைத்‌ துரோகத்தை மறக்கவே முடியாது என்று, அஹ்மாட்‌ ஸாஹிட்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

அன்று முதல்‌ இன்று வரையில்‌ பாஸ்‌ கட்சி உண்மையிலேயே பொய்‌ சொல்லிக்‌ கொண்டேதான்‌ வருகிறது. அதற்கு இன்னமும்‌ உயிரோடு இருக்கும்‌ சாட்சிகளில்‌ நானும்‌ ஒருவன்‌. ஹாடியுடன்‌ நேரடியாகப் பேச்சு நடத்தினேன்‌. முடிவுகளையும்‌ எடுத்தோம்‌. முதலில்‌ நம்‌ முன்‌ அவர்‌ (ஹாடி) ஒப்புக்‌ கொள்வார்‌. மறுநாள்‌ பேச்சை மாற்றிக்‌ கொண்டு முதல்‌ நாள்‌ ஒப்புக்‌ கொண்டதை மறுத்து விடுவார்‌. 

அவரை நம்பாதீர்கள்‌. பாஸ்‌ கட்சித்‌ தலைவராக அவர்‌ (ஹாடி) இருக்கும்‌ வரையில்‌, இஸ்லாம்‌ மீது சவாரி செய்து வரும்‌ அக்கட்சியுடன்‌ நாங்கள்‌ ஒத்துழைப்போம்‌ என்று கனவுகூட காணாதீர்கள்‌” என்று துணைப்‌ பிரதமருமான ஸாஹிட்‌ கூறியதாக சினார்‌ ஹரியான்‌ தெரிவித்தது. 

பேராக்‌, கோல கங்சாரில்‌ நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கோல கங்சார்‌ அம்னோ தொகுதிப்‌ பேராளர்கள்‌ கூட்டத்தில்‌ பேசும்போது ஸாஹிட்‌ இவ்வாறு பேசியிருக்கின்றார்‌.  இந்நிலையில்‌, பக்காத்தான்‌ ஹராப்பான்‌ கூட்டணியில்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌ அதன்‌ உறுப்புக்‌ கட்சிகளின்‌ நேர்மையை, அண்மையில்‌ நடந்த சில இடைத்‌ தேர்தல்களின்போது அவை வெளிப்படுத்திய ஒத்துழைப்பு மூலம்‌ பார்க்க முடிந்தது என்று ஸாஹிட்‌ குறிப்பிட்டார்‌. 

அதோடு, பேராக்கில்‌ ஒற்றுமை அரசாங்கம்‌ அமைக்கப்பட்டபோது, தேசிய முன்னணி (தேமு) தலைவர்கள்‌ மத்தியில்‌ இருந்து ஒருவர்‌ மாநில மந்திரி பெசாராக தேர்வு செய்யப்பட வேண்டும்‌ என்று பக்காத்தான்‌ ஹராப்பான்‌ விரும்பியது.  ஆனால்‌, பேராக்கில்‌ தேசிய முன்னணி வெறும்‌ ஒன்பது சட்டமன்ற இடங்களில்‌. மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அப்படி இருந்து மாநில மந்திரி பெசார்‌ பதவி தேசிய முன்னணிக்கு வழங்கப்பட்டது என்று ஸாஹிட்‌ தெரிவித்தார்‌.  அதோடு, பகாங்‌ மாநிலத்திலும்‌, தேசிய முன்னணியைச்‌ சேர்ந்த ஒருவரே மாநில. மந்திரி பெசார்‌ பதவி வகிப்பதையும்‌ பக்காத்தான்‌ ஹராப்பான்‌ ஏற்றுக்‌ கொண்டது என்று, தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட்‌ குறிப்பிட்டார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *