சூரிய ஒளியின் புயல் தாக்கத்தை பதிவு செய்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

- Muthu Kumar
- 16 May, 2024
சூரிய ஒளியால் உருவான சக்திவாய்ந்த புயலின் தாக்கத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ கடந்த வருடம் செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1ஐ மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை நமக்கு அனுப்புகிறது. அதன்படி ஆதித்யா விண்கலம் சமீபத்தில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை பதிவு செய்து தகவல்களை அனுப்பியுள்ளது.
இவற்றை இஸ்ரோ தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
கடந்த மே 11-ம் தேதி சூரியனின் ‘AR-13664’ பகுதியில் ஏற்பட்ட வெடிப்பினால் உருவான வலுவான மின்காந்தப் புயலின் தாக்கம் பூமியில் உணரப்பட்டது. இது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயல் ஆகும்.
இதையொட்டி கடந்த சில நாட்களாக பல்வேறு எக்ஸ்ரே கதிர்கள் பூமியை தாக்கியுள்ளன. வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. மேலும், அந்த பகுதியில் சூப்பர் ஹீட் பிளாஸ்மா சூரிய காற்று வீசுகிறது. இதை பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *