ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைத்தது இஸ்ரோ!

- Muthu Kumar
- 17 Jan, 2025
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 மீட்டராக குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 2 விண்கலன்களும் இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 220 கிலோ எடையுள்ள இரு வின்கலன்களை பரிசோதனை முயற்சிக்காக இணைக்கும் பணியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அது வெற்றிகரமாக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரோ பல சாதனைகளை படைத்து வருகிறது. சத்திரயான், ஆதித்யா என பல்வேறு சாதனைகள் படைத்துள்ள நிலையில், தற்போது புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. இஸ்ரோவின் பாரதிய அந்திரிசக்ஷா நிலையம் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதன்படி, வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் கடந்த மாதம் 30ஆம் தேதி பிஎஸ்எல்விசி 60 ராக்கெட் மூலமாக ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன்பின்பு, இந்த இரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக சுற்றி வந்தன. இந்த இரண்டு விண்கலன்களுக்கு இடையேயான தொலைவு 20 கி.மீட்டரில் இருந்து படிப்படியாக குறைத்து, இன்று அவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதால், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பத்தை மேற்கொண்ட நான்காவது நாடாக இந்தியா உலக அரங்கில் உருவெடுத்துள்ளது.
இந்த இரண்டு விண்கலன்களும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரன்யான் 4 திட்டத்திற்கு டாக்கிங் முறை முக்கியமானது என்பதால், அது வெற்றிக்காக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இஸ்ரோ நடத்திய இந்த சாதனைக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கும், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முறையை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டுகளில் இது இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *