உலகையே முடக்கிய லண்டன் விமான நிலைய தீ விபத்து!

- Muthu Kumar
- 22 Mar, 2025
திடீர் தீ விபத்து காரணமாக லண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் வர வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் சர்வதேச மார்க்கத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால். அருகில் வீடுகளில் வசித்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.
லண்டன் ஹீத்ரு விமானநிலைய மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் லண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மின் விநியோகம் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதில் தெளிவான அறிவிப்பு இல்லை. அதனால், வரும் நாட்களில் விமான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகலாம்.
ஐரோப்பிய விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் யூரோகண்ட்ரோல் அமைப்பு, ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கவில்லை.இங்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்படும் திட்டமுள்ளதாக தெரிவித்துள்ளது. 120 விமானங்கள் வழி மாற்றி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *