கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்-சுற்றி துள்ளிக் குதித்த டால்பின்கள்!

- Muthu Kumar
- 19 Mar, 2025
8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்பினர். செவ்வாய்க்கிழமை காலை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது.
அதன்பின்னர், இன்று புதன்கிழமை அதிகாலை டிராகன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழைந்தது. பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் தரையிறங்கினர்.
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களும் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டால்பின்கள் சூழ்ந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *