சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் குளறுபடி டிராகன் க்ரூ 10 ஒத்திவைப்பு!

- Muthu Kumar
- 13 Mar, 2025
விண்வெளியில் சிக்கியுள்ள விண்வெளி ஆராய்ச்சி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் - டிராகன் - க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நாசா (NASA - National Aeronautics and Space Administration) அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் நாளை (மார்ச் 14, 2025) அதிகாலையில் ராக்கெட் விண்ணில் செலுத்த படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், ஜூன் 5, 2024 அன்று 10 நாட்கள் பயணமாக போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 10 நாட்களுக்கு பிறகு பூமிக்கும் வருவதாக திட்டமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக விண்களத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது முடியாமல் போனது. போயிங் ஸ்டார்லைனர் மூலம் அவர்களை பூமிக்கு கொண்டு வருவது ஆபத்தில் முடியலாம் என நாசா கூறியிருந்தது.
இதன் காரணமாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், எலான் மஸ்கின் க்ரூ - 10 (Crew 10) மிஷன் மூலம் அவர்களை பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா முன்வந்தது. அதன்படி இன்று (மார்ச் 13, 2025) பூமியில் இருந்து விண்கலம் செலுத்த வேண்டியது. ஆனால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ 10 திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது. மேலும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் பட்சத்தில் நாளை (மார்ச் 14, 2025) அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *