சூரியனை ஆய்வு செய்ய இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி59

- Muthu Kumar
- 04 Dec, 2024
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது.இந்த செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட். இது சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது.
'புரோபா-3' செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் கவுன்ட்டவுன் தொடங்கியது. இதனை முடித்து கொண்டு இன்று மாலை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.
2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *