ஒட்டு மொத்த டெக் துறையும் ஷாக்கான சுச்சிர் பாலாஜி மரணத்தில் மர்மம்!

- Muthu Kumar
- 31 Dec, 2024
ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுச்சிர் பாலாஜியின் திடீர் மரணம் செயற்கை நுண்ணறிவு துறையிலும், அமெரிக்க டெக் துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான பாலாஜி நவம்பர் 26 அன்று தனது சான் பிரான்சிஸ்கோ வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவருடைய மரணத்திற்கும், ஓபன்ஏஐ நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதே டெக் ஊழியர்கள் மத்தியிலான அதிர்ச்சிக்கு முக்கிய காரணம்.இந்த நிலையில் சுச்சிர் பாலாஜி-யின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர் கூறுவது மட்டும் அல்லாமல் FBI அமைப்பு தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இவர்களின் கருத்துக்கு எலான் மஸ்க்-ம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓபன்ஏஐ நிறுவனத்தின் தரவு பயன்பாட்டு நடைமுறைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு சுச்சிர் பாலாஜி தனது வீட்டில் திடீரென இறந்து கிடந்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஓபன்ஏஐ நிறுவனம் தனது ஏஐ மாடல்-களைப் பயிற்றுவிக்க காப்பிரைட் கொண்ட தரவுகளை அப்பட்டமாகப் திருடி பயன்படுத்துவதாகவும், இது சட்டவிரோதமானது மட்டுமின்றி, இணையத்தின் எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் ஓபன்ஏஐ நிறுவனத்தின் விசில்ப்ளோவராக மாறியிருக்கும் சுச்சிர் பாலாஜி, இவரின் பேட்டி மற்றும் தகவல் வெளியீடு ஆகியவை ஓபன்ஏஐ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் பெரும் தடையாக மாறியுள்ளது. பல அமைப்புகள் கேள்வி கேட்க துவங்கியது.ஓபன்ஏஐ நிறுவனம் முறையற்ற வகையில் பிற அமைப்புகளின் தரவுகளை பயன்படுத்துவது குறித்தான தனது கருத்து வேறுபாடுகளால் ஆகஸ்ட் மாதம் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து பாலாஜி விலகினார்.
OpenAI நிறுவனத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஏஐ துறையில் சொந்தமாக முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.ஓபன்ஏஐ நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய சுச்சிர் பாலாஜி, நிறுவனத்தின் முன்னணி ஏஐ சாட்பாட் ஆன ChatGPT-யின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். 1.5 ஆண்டுகளாக அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்தார்.
2020ல் முழுநேரமாக ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியில் சேர முன்பு, சுச்சிர் பாலாஜி ஓபன்ஏஐ மற்றும் டேட்டா லேபிளிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கேல் ஏஐ-ல இன்டர்ன் ஆக பணியாற்றினார்.ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் பாலாஜியின் இந்நிறுவனத்தின் தரவு பயன்பாடு குறித்த கண்ணோட்டம் மெல்ல மெல்ல மாறியது. ஆரம்பத்தில் ஏஐ மாடல்களை பயிற்றுவிக்க உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக டிஜிட்டல் தரவைப் பயன்படுத்துவதில் சரி என ஏற்றுக்கொண்டாலும், 2022 ஆம் ஆண்டு நவம்பரில் ChatGPT பொது வெளியீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் நிலைப்பாடு மாறியது.
ஓபன்ஏஐ நிறுவனம் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள் பதிப்புரிமை குறித்த வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த சந்தேகம் அவருக்கு மேலும் அதிகரித்தது. இதன் வாயிலாகவே பல கேள்விகளை முன்வைத்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதன் பின்பு அவர் தங்கியிருந்த வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *