மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல்!

- Muthu Kumar
- 26 Dec, 2024
இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜன.,14ம் தேதி மகர சங்கராந்தியும், ஜன.,29ல் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசையும், பிப்.,3ல் பசந்த் பஞ்சமியும் கொண்டாட இருப்பதால், இந்த நாட்களில் லட்சணக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், கடந்த டிச.,23ம் தேதி பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் காவல்நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தி காலிஸ்தானி பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மஹா கும்ப மேளா நிகழ்ச்சிக்கு, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மஹா கும்ப மேளாவை சீர்குலைக்க, சாதி பிரிவினைவாதத்தை குர்பத்வந்த் சிங் பன்னுன் தூண்டி விட முயற்சிப்பதாக அகில பாரதிய அஹாதா பரிஷத் அமைப்பின் தலைவர் மஹாந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பன்னுன் எங்களின் மஹா கும்ப மேளாவில் நுழைந்தால் அடித்து விரட்டி அடிப்போம். இது போன்ற பல பைத்தியங்களை பார்த்து விட்டோம். சீக்கியர்கள், ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும் நிகழ்ச்சி இது. பன்னுனின் பிரிவினைவாத முயற்சி தேவையற்றது. சனாதன பாரம்பரியத்தை சீக்கிய சமூகத்தினர் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் சனாதன தர்மத்தின் பாதுகாவலர்கள். எனவே, இதுபோன்ற மிரட்டல்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்’, எனக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *