சபா சட்டமன்றத் தேர்தலில் தேமு 'உறுதியான அணியை' களமிறக்கும்!

- Muthu Kumar
- 01 Jul, 2025
தங்காக். ஜூலை 1-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி ஓர் 'உறுதியான அணியை களமிறக்கும் என்று, அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
மாநில சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவதில், உள்ளூர் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடுகளைக் காண இருப்பதுடன் தற்போது பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொண்டிருப்பதாக, அம்னோ துணைத் தலைவருமான முஹமட் கூறினார்.
"சபா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி
தனித்துப் போட்டியிட முடியாது என்ற காரணத்தினால், சபா மாநில பக்காத்தான் ஹராப்பானுடன் நாங்கள் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். "தனித்துப் போட்டியிட விரும்பவில்லை என்பதால், எங்களுக்கு பங்காளிகள் தேவைப்படுகின்றனர். இதைத் தவிர்த்து, தொகுதி ஒதுக்கீடு உட்பட தேர்தல் தொடர்பிலான பல்வேறு அம்சங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
“எங்களுக்குள் குழப்பம் வேண்டாம். வாக்காளர்கள் குழப்பமடையாமல் இருக்கவும் சபாவை ஆளக்கூடிய வலுவான கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்கவும் நாங்கள் ஒரு வலுவான அணியாக இருக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜொகூரின் லேடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, வெளியுறவு அமைச்சருமான முஹமட் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, வாக்காளர்களின் மனநிலை மற்றும் அடிமட்ட கருத்துக்களைப் புரிந்து கொள்ள விரிவான உணர்வு ஆய்வு
நடத்தப்பட்டு வருவதாகவும் இது மத்திய, பிரிவு மற்றும் 'போர் அறை' தலைவர்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்றும் மகளிர் அம்னோ தலைவர் நோராய்னி அஹ்மாட் கூறினார்.தேர்தல்களுக்கு மட்டுமல்ல. கட்சியை வலுப்படுத்த நாடு முழுவதும் வாக்காளர்களின் உணர்வு மீதான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
"சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, உணர்வுகள் குறித்த ஆய்வு நிறைவடைந்துள்ளது. அதன் முடிவுகளை வெளியிடுவதை நாங்கள் தலைமையிடம் விட்டு விடுகிறோம் என்று, பினாங்கின் கப்பளா பத்தாஸ் அம்னோ மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகளின் கூட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறினார். தேர்தல் கேந்திரம் எப்போதும் உச்சகட்ட தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அம்னோ மகளிர் சபா அம்னோவுடன் இணைந்து செயல்பட்டு
வருவதாக அவர் கூறினார். சபா மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் நவம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது.
Timbalan Presiden UMNO, Mohamad Hasan menyatakan Barisan Nasional akan bentuk gabungan kuat dalam PRN Sabah, bekerjasama dengan Pakatan Harapan. Kajian sentimen pengundi dijalankan untuk elak kekeliruan, dan strategi pilihan raya sedang dirancang rapi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *