இந்திய பிரதமர் மோடி பங்கேற்கும் பிரேசில் பிரிக்ஸ் மாநாடு!

- Muthu Kumar
- 06 Jul, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக பிரேசில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அங்கு நடக்கும் 17வது BRICS மாநாட்டில் பங்கேற்கிறார். அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த மாநாட்டை அமெரிக்கா உற்று நோக்க தொடங்கியுள்ளது.
ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது கட்டமாக, பிரதமர் மோடி சனிக்கிழமை மாலை பிரேசிலின் கலியோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். பிரிக்ஸ் மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் அமைதி மற்றும் பாதுகாப்பு, பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, காலநிலை நடவடிக்கை, உலகளாவிய சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி விஷயங்கள் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்.
பிரேசில் நாட்டு அதிபர் லூலாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நலன் சார்ந்த வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்களுடனான தொடர்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கரன்சி, டாலருக்கு மாற்றான வர்த்தகம், அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்ளுதல், சீனாவின் அரிய கனிமங்கள் ஏற்றுமதி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்கம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. எனவேதான் இந்த மாநாடு அமெரிக்காவின் கவனத்தை பெற்றிருக்கிறது.
கடந்த காலங்களில் அமெரிக்க டாலருக்கு மாற்றான பண பரிமாற்றத்தை பிரிக்ஸ் தலைவர்கள் முன்மொழிந்தபோது இந்தியா அதை மறுத்தது. குறிப்பாக பிரிக்ஸ் கரன்சி விஷயத்தில், நாங்கள் டாலரை விட்டு கொடுக்க மாட்டோம் என்று இந்தியா பிடிவாதகமாக இருந்தது. டாலர் ஆதிக்கம் நம்மை வாட்டி எடுத்திருந்தாலும் கூட, இந்தியா அதை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. சீனா பிரிக்ஸ் நாடுகளில் இருப்பதால், சீனாவுடன் ஒத்துழைத்து போவதில் இந்தியாவுக்கு விருப்பம் இல்லை.
ஆனால் ரஷ்யா பிரிக்ஸ் அமைப்பில் இருக்கிறது. ஏறத்தாழ 10 நாடுகள் இந்த அமைப்பில் இருக்கின்றன. எனவே, சீனாவை மட்டும் காரணம் காட்டி இந்த நாடுகளுடனான உறவை இந்தியா இழக்கப்போகிறதா? என்பதும் கேள்வியாக இருக்கிறது. இதற்கான விவாதங்களுக்கு தீர்வாக தற்போது நடக்கும் பிரிக்ஸ் மாநாடு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *