பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மாசி மகம் திருவிழா!

- Muthu Kumar
- 12 Mar, 2025
கிள்ளான், மார்ச் 12:
போர்ட் கிள்ளான், பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் மாசி மகம் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இத் திருக்கோயிலில் 49 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த மாசி மகம் மகோற்சவத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
கடந்த மார்ச் ஐந்தாம் தேதி முதல் கொடியேற்றத்தோடு தொடங்கிய இத்திருவிழா விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகளோடு வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று புதன் கிழமை நடைபெற்ற மாசி மகம் திருவிழாவில் காலை 9.30 மணிக்கு பக்த பெருமக்கள் பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பண்டமாரான் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பக்த பெருமக்கள் பால் குடம் ஏந்தி நடந்து வந்து, பாலாபிஷேகத்தால் அம்மனை மகிழ்வித்தனர்.
ஆலய நிர்வாகத்தினரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வில் அன்னதானமும் பக்த பெருமக்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை இரவு 7 மணி தொடங்கி ரத ஊர்வலத்தில் அம்பாள் அருள் பாலிப்பதோடு, மறுநாள் அம்மனின் பொன்னூஞ்சல் வைபவமும், விசேச பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜ கோபுரத்தோடு, கம்பீரமாய் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனை தரிசித்த வண்ணம் மெய் மறந்து அவள் நாமம் போற்றி உருகி நெகிழ்ந்தனர் பக்த பெருமக்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *