தைப்பூசத் திருநாள் - பொதுமக்களே உஷார்...

- Shan Siva
- 10 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 10: தைப்பூசம் நாடெங்கிலும்
கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள்களில்
மிகவும் விசேஷமாக நாடெங்கிலும் அதிக பக்தர்கள் கூடும் திருவிழா இந்தத் தைப்பூசத் திருவிழா.
எனவே, கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள்
எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூட்ட நெரிசலைச் சாதகமாக்கி
சங்கிலிகளை லாவகமாகத் திருடும் கும்பல் கைவரிசையைக் காட்டலாம் என்பதால் பொதுமக்கள்
கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அண்மையில் செந்தூல்
தண்டாயுதபாணி ஆலயம் உட்பட இரு ஆலயங்களில் பலரும் தங்கச் சங்கிலிகளைப் பறிகொடுத்து புகாரளித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கழுத்தில் தங்க ஆபரணங்களை அணிந்து
செல்வதைத் தவிர்ப்பதே நல்லது என அறுவுறுத்தப்படுகிறார்கள். அவசியம் என்றால் கவனமாக
அணிந்து செல்லுங்கள்.
இதற்கிடையில்,
தைப்பூச கொண்டாட்டம் முழுவதும் பொதுமக்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,306 போலீசார் பணியில்
ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பத்துமலையைப் பார்வையிட்ட பின்னர் சிலாங்கூர் காவல்துறை
தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
பத்து மலை கோயிலுக்கு
தங்கள் சொந்த வாகனங்களை ஓட்டிச் செல்லும் பார்வையாளர்கள், நியமிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, தங்கள் வாகனங்கள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஹுசேன் அறிவுறுத்தியுள்ளார்.
கோயில் பகுதியில்
ட்ரோன்கள் பறப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ட்ரோன்களை பறக்க விரும்புவோர் மலேசிய
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,”
என்று அவர் வலியுறுத்தியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *