பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சிபோல் செயல்படவில்லையா?ஹம்சா மறுப்பு!

- Muthu Kumar
- 22 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 22 -
எதிர்க்கட்சிபோல் செயல்படாமல், மக்களின் வாழ்க்கைச் செலவினம், இனம் மற்றும் சமய விவகாரங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட விவகாரங்கள் மீது மட்டுமே பெரிக்காத்தான் நேஷனல் தற்போது அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படும் கூற்றை, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் மறுத்துள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த வாழ்க்கைச் செலவினம் முதல் பெரிய விவகாரங்கள் அல்லது அரசாங்கம் சம்பந்தப்பட்ட "லஞ்ச ஊழல் வரையிலான பல்வேறு விவகாரங்களுக்கு எதிராக பெரிக்காத்தான் நேஷனல் குரல் கொடுத்து வருவதாக, பெர்சத்து கட்சி துணைத் தலைவருமான ஹம்ஸா தெரிவித்துள்ளார். "மக்களவைக் கூட்டத் தொடரை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வராமல் இருக்கலாம். அதனால்தான் பெரிக்காத்தான் நேஷனலுக்கு எதிரான குறைகூறல்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.
"மக்களின் வாழ்க்கைச் செலவின விவகாரத்தை பெரிக்காத்தான் நேஷனல் அதிக அளவில் எழுப்பி வருவது உண்மைதான். காரணம் இது பெரிய விவகாரமாக இருந்து வருகிறது. உலகில் எந்த நாட்டிலும் இந்த விவகாரம் குறித்துதான் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆதலால், இந்த விவகாரத்தை மட்டுமே எதிர்க்கட்சி கையாண்டு வருகிறது என்று கூறிவிட முடியாது.
“இதர விவகாரங்களையும் நாங்கள் எழுப்பி வருகின்றோம். மொத்தம் 1,660 கோடி வெள்ளி மதிப்பிலான (அரசாங்கத்தின்) ஹெலிகாப்டர் வாடகை விவகாரமும் அவற்றில் அடங்கும். இதற்கான பணத்தை பின்னர் இளைஞர்கள்தான் செலுத்த வேண்டி வரும். இந்த விவகாரத்தையும் நாங்கள் மக்களவையில் எழுப்பியிருந்தோம்.
“உள்நாட்டு பச்சரிசி விவகாரத்தையும் மக்களவையில் நாங்கள் எழுப்பியிருந்தோம். இது மிகப் பெரிய போராட்டம். இது குறித்து பிரதமருடன் நான் விவாதமும் செய்திருக்கின்றேன். அதன் பிறகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்நாட்டுப் பச்சரிசிக்கான விலையை 1,200 வெள்ளியிலிருந்து 1,500 வெள்ளிக்கு அதிகரித்துள்ளார்" என்று நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க குறிப்பிட்ட தரப்பினர் முயன்று வருதுவதுதான் இப்போதைக்கு நிலவி வரும் ஒரு விவகாரம் என்று, லாருட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஹம்ஸா தெரிவித்தார். "பல விவகாரங்கள் மீது நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். தேசிய கணக்கு தணிக்கை குழுக் கூட்டத்திலும் நாங்கள் பல விசயங்கள் குறித்து பேசியிருக்கின்றோம். அக்குழுவிடம் எங்களின் கருத்துகளையும் தெரிவித்திருக்கின்றோம்" என்று. கைரி ஜமாலுடினும் ஷாரில் ஹம்பானும் நடத்தி வரும் போட்காஸ்ட் நேர்காணலில் ஹம்ஸா கூறினார்.
Ketua Pembangkang, Datuk Seri Hamzah Zainudin menafikan dakwaan Perikatan Nasional hanya fokus pada kos sara hidup dan isu perkauman. Beliau menegaskan PN turut membangkitkan isu rasuah, sewa helikopter kerajaan serta harga beras tempatan dalam sidang Parlimen dan forum lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *